மல்லிகை முல்லை பாடல் வரிகள்

Last Updated: Jul 17, 2026

Movie Name
Annan Oru Koyil (1977) (அண்ணன் ஒரு கோவில்)
Music
M. S. Viswanathan
Year
1977
Singers
T. M. Soundararajan
Lyrics
Kannadasan
மல்லிகை முல்லை பொன் மொழி கிள்ளை
அன்புக்கோர் எல்லை உன்னைப் போல் இல்லை
பொன் வண்ண ரதம் ஏறி இம் மண்ணில் எங்கும் ஓடி
பொன் வண்ண ரதம் ஏறி இம் மண்ணில் எங்கும் ஓடி
நல் அன்பு துணைத் தேடி நான் தருவேன்

மல்லிகை முல்லை பொன் மொழி கிள்ளை

சூடிக் கொடுத்தாள் பாவை படித்தாள்
சுடராக எந்நாளும் தமிழ் வானில் ஜொலித்தாள்
கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்
கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்
கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள்

கன்னித் தமிழ் தேவி மைக் கண்ணன் அவள் ஆவி
தன் காதல் மலர் சூடி மாலையிட்டாள்

தோகை மீனாள் பூவை ஆனாள்
சொக்கேசன் துணையோடு 
ஊர்கோலம் போனாள் 

தோகை மீனாள் பூவை ஆனாள்
சொக்கேசன் துணையோடு 
ஊர்கோலம் போனாள்
மாலை கண்டாள் கோவில் கொண்டாள்
மாணிக்க மூக்குத்தி ஒளி வீச நின்றாள்

தென்றல் தொட்டு ஆட கண் சங்கத் தமிழ் பாட
தன் மக்கள் வெள்ளம் கூட காவல் கொண்டாள்

மல்லிகை முல்லை பொன் மொழி கிள்ளை

மாலை சூடி வாழ்ந்த வேளை
வன வாசம் போனாலும் பிரியாத சீதை 

மாலை சூடி வாழ்ந்த வேளை
வன வாசம் போனாலும் பிரியாத சீதை
ராம நாமம் தந்த ராகம்
லவனாக குசனாக உருவான கீதம்

மாமன் என்று சொல்ல 
ஒரு அண்ணன் இல்லை அங்கே
அந்த அண்ணன் உண்டு இங்கே அள்ளி வழங்க

மல்லிகை முல்லை பொன் மொழி கிள்ளை
அன்புக்கோர் எல்லை உன்னைப் போல் இல்லை
பொன் வண்ண ரதம் ஏறி இம் மண்ணில் எங்கும் ஓடி
நல் அன்பு துணைத் தேடி நான் தருவேன்