மங்கள ரூபிணி பாடல் வரிகள்

Last Updated: Apr 25, 2024

Movie Name
Tamil Devotional (2013) (பக்திப்பாடல்கள்)
Music
Randoms
Year
2013
Singers
Unknown
Lyrics
Unknown
மங்கள ரூபிணி மதியொளி சூலினி
மன்மத பாணியளே
சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும்
சங்கரி சவுந்தரியே
கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல்
கற்பகக் காமினியே

ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்கநிவாரணி காமாட்சி

கான் உறுமலர் எனக் கதிர் ஒளி காட்டிக்
காத்திட வந்திடுவாள்
தான்உறு தவஒளி தார்ஒளிமதி ஒளி
தாங்கியே வீசிடுவாள்
மான்உறு விழியாள் மாதவர் மொழியாள்
மாலைகள் சூடிடுவாள்

ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி

சங்கரி சவுந்தரி சதுர்முகன் போற்றிட
சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப்
பொருந்திட வந்தவளே
எம்குலம் தழைத்திட எழில் வடிவுடனே
எழுந்த நல் துர்க்கையளே

ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி

தணதண தந்தண நவில்ஒளி முழங்கிட
தண்மதி நீ வருவாய்
கணகண கங்கண கதிர்ஒளி வீசிட
கண்மணி நீ வருவாய்
பணபண பம்பண பறைஒலி கூவிட
பண்மணி நீ வருவாய்

ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி
பஞ்சநல் பாணியளே
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக்
கொடுத்த நல் குமரியளே
சங்கடம் தீர்த்திட சமர் அது செய்த
நல் சக்தி எனும் மாயே

ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி

எண்ணியபடி நீ அருளிட வருவாய்
எம் குலதேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப்
பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி அதனால் கருணையே காட்டி
கவலைகள் தீர்ப்பவளே

ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி

இடர் தருதொல்லை இனிமேல் இல்லை
என்று நீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச்
சுகமது தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து
பழவினை ஓட்டிடுவாய்

ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி

ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி
ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி
ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி
ஜெய ஜெய ஸ்ரீதேவி

ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி
துக்க நிவாரணி காமாட்சி
துக்க நிவாரணி காமாட்சி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.